கால் கிலோ காதல் அரை கிலோ கனவு - 9

இது ஒரு தருணம். சற்றே மாறுபட்ட, எதிர்பாராத, மகிழ்ச்சியும் கலவரமும் ஒருங்கே உருவாகும் தருணம். இதையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். பைபாஸ் முத்துமாரியம்மனோ குருட்டு அதிர்ஷ்டமோ அவசியம் கைகொடுக்கும். பத்மநாபன் திடசித்தம் கொண்டான். ஸ்லேவ் வீரபத்திரன் அச்சமூட்டக்கூடிய ஆகிருதியில் இருந்தால்தான் என்ன? அவன் ஒரு ஸ்லேவ்தான். கண்டிப்பாக அவனால் வளர்மதியைக் காதலிக்க முடியாது. வத்தக்காச்சி போலிருக்கும் பத்மநாபனால் முடியும். அப்பாவுக்கும் ஹெட் மாஸ்டருக்கும் அகில உலகுக்குமே விஷயம் தெரிந்தாலும் ஆமாம், காதலிக்கிறேன் என்று அடித்துச் சொல்ல அவனால் முடியும். சுந்தரமூர்த்தி முதலியாருக்கும் அவர் மகன் அருணாசல முதலியாருக்கும் பேத்தி வளர்மதிக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் இன்னபிற அத்தனை உருப்படிகளுக்கும் கைகட்டிச் சேவகம் செய்யும் வீரபத்திரனால் சாத்தியமில்லை.

இந்தத் துணிச்சல் மிகுந்த எண்ணத்துக்கு வலு சேர்ப்பதுபோல், உப்புகொடோனுக்கு அருகே தான் வரச்சொன்ன இடத்துக்கு வீரபத்திரனுடன் வந்து சேர்ந்ததுமே மன்னிப்புக் கேட்கும் குரலில் வளர்மதியும் ஒரு விஷயத்தைச் சொன்னாள்.

‘தனியாத்தான் கெளம்பினேன். பாப்பா தனியா போவுதேன்னு தாத்தாதான் இவன அனுப்பிவெச்சாரு. வீரபத்திரா, நீ போய் நாலு புளியாங்கா எடுத்தாயேன். சாப்ட்டுக்கினே பேசலாம்’ என்று சொன்னாள்.

வீரபத்திரன் பத்மநாபனை முறைத்தான். அல்லது வெறுமனே அவன் பார்ப்பதே தனக்கு முறைப்பதுபோல் தெரிகிறதா?

பத்மநாபனுக்குக் குழப்பமாக இருந்தது. இருப்பினும் அவனை வெறுப்பேற்றுவது என்று முடிவு செய்து, ‘புளியாங்காயெல்லாம் வேணாம் வளரு. எனக்கு ஒரு பெரிய டவுட்டு. அத்த மொதல்ல க்ளியர் பண்ணு. பின்னத்தின் சுருங்கிய வடிவம்னா என்னா? மகாலிங்க வாத்தியாரு சொன்னப்ப சரியாவே விளங்கல. பன்னீராண்ட கேட்டேன். போடான்னுட்டான். ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குற திமிரு… இத்த புரிஞ்சிக்காம இன்னிக்கி எப்பிடி ஓம்மொர்க்கு பண்றதுன்னே தெரியல.’

வளர்மதிக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டாள். அழகான சந்தர்ப்பங்களை இன்னும் அழகாக்கலாமே? எனவே ஆரம்பித்தாள். ஓட்டைப் பாலத்தின் கைப்பிடிச் சுவரில் தக்கென்று ஏறி அமர்ந்து பத்மநாபன் கையிலிருந்த நோட்புக்கை வாங்கிப் பிரித்தாள். அவன் பாக்கெட்டிலிருந்து அவளே பேனாவை எடுத்து, ‘இங்க பாரு..’ என்று ஆரம்பித்தாள்.

[Read more →]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு - 8

பாண்டியாடிக்கொண்டிருந்த வளர்மதி திரும்பிப் பார்த்தபோது அவள் கண்ணில் முதலில் பட்டது பத்மநாபன் இல்லை. ஹெட்மாஸ்டர்தான். எனவே அவள் ஜாக்கிரதை உணர்வு கொண்டாள். ஆட்டத்தை நிறுத்தாமலேயே, ‘என்னடா?’ என்று அலட்சியமாகக் கேட்டாள்.

‘உன்னாண்ட கொஞ்சம் பேசணும்’ என்று பத்மநாபன் சொன்னான்.

‘இப்ப முடியாது. அஞ்சு நிமிஷத்துல கிளாசுக்கு வந்துடுவேன். இங்கிலீஷ் சார் ‘மிஸிண்ட்ரப்ரடேஷன் லீட்ஸ் டு மிஸரி’ல இன்னிக்கி டெஸ்ட்னு சொன்னாரே, படிச்சிட்டியா?’

பத்மநாபனுக்கு அவளுடைய பேச்சும் கவனிக்காத பாங்கும் குழப்பம் தந்தன. அதைவிடக் குழப்பம், சம்பந்தமில்லாமல் பாடம் குறித்து அவள் நினைவூட்டியது. எரிச்சலாக இருந்தது. அடக்கிக்கொண்டு திரும்பவும் அழைத்தான். உன்னாண்ட கொஞ்சம் பேசணும்.

வளர்மதியும் தோழிகளும் ஆட்டத்தை முடித்துக்கொண்டு முகம் துடைத்தபடி வகுப்புக்குப் புறப்பட்டார்கள்.

‘அப்ப நீ வரமாட்ட?’

‘எங்கடா?’

‘பேசணும்னு சொன்னனே?’

வளர்மதி அவனை உற்றுப்பார்த்தாள். வெறும் பத்தடி தொலைவிலேயே கையில் பிரம்புடன் காவல் காக்கும் ஐயனார் போல் மைதானம் முழுவதையும் தன் பார்வையால் அளவெடுத்துக்கொண்டிருக்கிறார் ஹெட் மாஸ்டர். இந்தக் குடுமிக்கு ஒரு சின்ன உள்ளுணர்வு கூடவா இருக்காது? மடையன், மடையன். திரும்பிப் பாருடா தடியா.

ஆனால் பத்மநாபன் கொக்குக்கு மதி எப்போதும் ஒன்று. வளர்மதி. அவள்மீது வளர்த்துக்கொண்ட காதல். அப்பாவை அழைத்துவரச் சொல்லியிருக்கும் ஹெட் மாஸ்டர். விஷயம் என்னவாகப்போகிறது? இன்று விடை தெரியும். இது குறித்து அல்லது வேறு எது குறித்தாவது அவன் வளர்மதியுடன் பேசியாகவேண்டும். அதைவிட என்ன பெரிய விஷயம்? மிஸிண்ட்ரப்ரடேஷன் லீட்ஸ் டு மிஸரி நாசமாய்ப் போகட்டும்.

[Read more →]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு - 7

உலகம் இருட்டாக இருக்கிறது. எதிர்காலம் என்னவாகும் என்று யூகிப்பதற்கில்லை. நிகழ்காலத்தில் அப்பாவை அழைத்துவரச் சொல்லி இம்முறை ஓலை கொடுத்தாகிவிட்டது.

பொதுவாக பள்ளிக்கூடத்துக்கு அப்பாக்களை அழைத்துச் செல்வது அத்தனை கௌரவமான செயல் அல்ல. குற்றச்சாட்டுகளைப் படிக்கிற திருவிழா அது. ஆசிரியர் முன்னால் அப்பாக்கள் நிகழ்த்தும் வன்கொடுமைகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. அங்கேயே அடித்து, அங்கேயே திட்டி, தன் மானத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்குவதற்காகவே பிறந்தவன் என்று பட்டம் சூட்டி, தன் தலையில் அடித்துக்கொண்டு, அழுது நாடகம் அரங்கேற்றி ஒரு வழி பண்ணிவிடும் அப்பாக்கள்.

பத்மநாபனுக்கு விழப்போகிற அடிகள் பற்றியோ, கேட்கப்போகிற வசவுகள் பற்றியோ பெரிய வருத்தமில்லை. விஷயம் தன் காதல் சம்பந்தப்பட்டது. அப்பாக்களுக்குக் காதல் என்றால் என்னவென்று தெரியாது அல்லது புரியாது. புரியவைப்பது பெரும் கஷ்டம். முளைத்து மூணு இலை என்று ஆரம்பித்துவிட்டால் தையூர் பண்ணையின் பம்ப் செட் மாதிரி பொழிந்துகொண்டே இருப்பார்கள்.

பத்மநாபன் நிறைய பார்த்திருக்கிறான். வெங்கட்ராமன் காதலில் விழுந்தபோது அவனது அப்பா வந்து அரங்கேற்றிய ஆக்ஷன் காட்சிகள். துரைராஜின் அப்பா மரத்தில் கட்டிப்போட்டு அடித்த அடிகள். பாபுவின் அப்பா ஒரு மாறுதலுக்குத் தன் தலையில் தானே அடித்துக்கொண்டு அழுத காட்சி இன்னமும் அவன் மனக்கண்ணில் நிற்கிறது.

இத்தனை பாடுகள் படுவதற்காகவாவது எந்தப் பெண்ணாவது காதலை ஏற்றுக்கொள்ளலாம். கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் காதலர்களின் எண்ணிக்கைதான் உயர்ந்துகொண்டே போகிறதே தவிர ஒரு காதலியும் அவதரித்தபாடில்லை. பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? காதலித்துத் தொலைத்தால் தான் என்ன?

[Read more →]

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!